Life as a rain dance!

Life as a rain dance!

Sunday, December 27, 2009

ஜன்னல் கம்பிகளில் எஞ்சும் துளிகள்

நனைதல்

மழையில் நனைதல் பிடிக்கும் என்றாய்
பழுதடையக் கூடியதாகவோ
நனைந்துவிடக் கூடாததாகவோ
எதுவும் இல்லாத என்னை
நனைத்திருந்த மழைகளே
மிகவும் பிடித்தமானவை
என்கிறேன் உன்
நெறிபடும் புருவங்களிடம்


குரல்

பின்னிரவில் படிக்கும் கவிதைப் புத்தகத்தின்
ஒரு பக்கத்தையும் புரட்ட முடிவதில்லை - கீழே
தெருவில் ஒற்றையாய் ஒலித்து பின்தேயும்
குழந்தையின் அழுகுரலுக்குப் பின்னால்


தாகம்

கொடிய தாகத்துடன் அலைகிறேன்
எந்தப் பொழுதும்
வறண்டு உலர்ந்து தரையில் மீனாய்
துள்ளியும் துவண்டும் வீழும் நாவு
சொட்டு நீரின் கருணைக்காக
எவெரெவரிடமோ எதெனெதனிடமோ
இறைஞ்சும் வாய்
பார்த்தல் பணியைப் பால்யத்துடன் துறந்து
தாகம் தீர்க்குமிடம்
தேடியலையும் கண்கள்

தாகம்!திராவகத்தையும் ருசித்துவிடத்
தூண்டும் தாகம்
வெறுமையின் உடலாய்த் தவழ்ந்து
நான் செல்லும் இந்தப் பாலைச்சாலையின்
முடிவில் கண்கள் குவித்துக்
காண்கிறேன் ஒரு கூடாரம்

கணமொன்று தயங்கி பிறகு
உள்நுழையும் கால்கள்
கனவா புரியவில்லை
கண்கள் கசக்கியும் மாறாத
காட்சி நனவுதான்

விதவிதமான அளவுகளில்
வடிவங்களில் ஆயிரமாயிரம்
கண்ணாடிக் குடுவைகள்
உள்ளே திரவங்களுடன்

வெடிக்கும் தலையைப்
பிடித்துக் கொண்டு
வெறிக்கும் கண்களால்
பார்க்கிறேன்
"எந்தத் திரவம் என் தாகம் தீர்க்கும்?"

3 comments:

  1. எந்த மழை
    எந்த மண்ணுக்கு-என
    ஒவ்வொரு துளிக்கும்
    சொல்லப் பட்டிருக்கிறது!

    -சம்யுக்தா @ உமா

    ReplyDelete
  2. Nanaithal and kural are better than thaaham. A poem does not have to have logical story. Samyuktha may guide you.
    Noble

    ReplyDelete
  3. Well done with "kural" ..!! Great job .!!

    ReplyDelete